ஆனால் இந்த லட்சியம்,குடும்பம்,எதிர்காலம் என்பதெல்லாம் இங்கே வந்து இங்கே கிடைக்கும் தற்காலிக சுகங்கள், நண்பர்கள, களியாட்டங்கள், கேளிக்கைகள், சொகுசான வாகணங்கள், சொகுசான வாழ்க்கை மூலமாக மறக்கடிக்கப்பட்டு உழைத்த காசெல்லாம் வீனாக்கி கடன் தொல்லைகளில் சிக்கி இறுதியில் வெறும் கையோடு நாடு திரும்பும் பலரை பார்த்திருக்கிறோம்! இவ்வாறாக துபாயில் வேலைபார்க்கும் ஒரு ஜூனியர் மலயாளி டாக்டர் தன் வருமானத்திற்கு அதிகமான சொகுசான/கேளிக்கையான வாழ்க்கையில் மூழ்கி அவற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் வங்கிக்க்டன்,கிரெடிட் கார்ட் என சிக்கி கஷ்டப்பட்டு பலரை ஏமாற்றி பின் திருடும் நிலைக்கே சென்று பின் தன்னையும் தன் நிலையையும் உணர்ந்து திருந்தும் கதைதான் இந்த டயமண்ட் நெக்லஸ்.
அதிகமான மலயாள திரைப்படங்களில் பிரம்மாண்டம் இல்லை, மிகப்பெரிய மாஸ் ஹீரோக்கள் இல்லை, 100 பேரை தனியாளாய் அடித்து துவைக்கும் ஹீரோயிசம் இல்லை,கவர்ச்சி குத்துப்பாட்டுகள் இல்லை ஆனால் அவற்றையும் ரசிக்க முடியும் காரணம் நல்ல (யதார்த்த) கதையும் சுவாரசியான திரைக்கதையும் இயக்கமும்தான். மசாலா சினிமா ரசிகனின் திருப்தியை இவ்வாறான படங்கள் கண்டுகொள்வதில்லை. கண்டு கொள்ளத்தேவையும் இல்லை. இது அவர்களுக்கான படமும் அல்ல! இவ்வாறான படங்களை பார்க்கும் போது தமிழில் இவ்வாறான கதைகளும் திரைப்படமாக வராதா என்ற ஏக்கம் வருவதுடன் தமிழ்சினிமா (அவ்வப்போது ஒன்றிரண்டு விதி விலக்குகளைத்தவிர) மசாலா குப்பைகளை நம் ரசனைக்குள் கொட்டி இது வரை காலமும் நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது..
டாக்டராக பஹாத் பாசில் மிக அருமையான யதார்த்த நடிப்பு. இவர் தேர்வு செய்யும் கதைகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை பீமேல் கோட்டயத்தில் ஒரு வில்லத்தனமான நடிப்பென்றால் இதில் டாக்டராக/காதலனாக/கனவனாக/நவநாகரீக இழைஞசனாக நடிப்பில் அசத்தியிருப்பார். தமிழ் நர்சாக கௌதமி நாயர் என்னா கண்ணு அது! மலயாள பொண்ணுங்களுக்கு மட்டும் கண்ணு இவ்வளவு பெருசா ஏன்னு தெரியல்ல? கேன்சர் நோயாளியாக சம்விருதா பெரிய டாக்டராக ரோஹினி. இவர்களுடன் டாக்டரின் வெகுளியான மனைவியாக வருபவரும் எல்லா காட்சியிலும் புன்னகைக்க வைக்கிறார் இறுதிகாட்சி தவிர! முதல் முதலாக துபாய் வந்து காருக்குள் ஏறச்சொன்னதும் காரின் டிரைவர் சீட் பக்க கதவைத்திறந்து “இவ்விட இந்தப்பக்கம் இஸ்டீரின் அல்லே” என்று வெட்கப்பட்டு “அய்யே” என அடுத்தப்பக்கம் போய் உட்காரும் காட்சியில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை!
கதை,திரைக்கதை இக்பால் குட்டிபுரம் இயக்கம் லால்ஜோஸ். வேறு ஒருவரின் கதை திரைக்கதைக்கு இயக்கமட்டும் செய்யும் பல இயக்குனர்களை மலயாள சினிமாவில் கானலாம்.. அப்போதுதான் சிறந்த எழுத்தாளர்களின் கதைகளும் திரைவடிவம் பெற ஏதுவாகயிருக்கிறது. துபாயிலும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலும் 20,25 ஆண்டுகள் தன் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டு லேபர் கேம்பில்லே தன் வாழ்க்கையையு,இளமையையும்,கனவையும் தொலைக்கும் மலயாளிகளின் வாழ்க்கை வேதனைகளையும்,கொண்டாட்டங்களையும் காட்ட மறக்கவில்லை சில இடங்களிலாவது. காட்சியமைப்பில் அழ்கிய துபாயின் உயர்ந்த கட்டடங்களையும் சாலைகளையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபாவுக்கு பக்கத்திலே அதிக காட்சிகள் எடுத்திருப்பது அழகு.!
இறுதியாக மலயாளி என்றால் சுயநலம் பிடித்தவன், காசுக்காக எதையும் செய்வான, மற்றவர்களை பற்றி சிந்திக்கமாட்டான், தமிழனை கண்டாலே பிடிக்காது போன்ற நம் மனதில் பதிந்திருக்கும் கருத்துக்களை உடைக்கும் வண்ணம், இல்லை! மலயாளிக்குள்ளும் நல்ல மனசும் மனிதாபிமானமும் இருப்பதாய் உணர்த்தி படம் முடிவடைகிறது
படத்தின் பாடலொன்று துபாயின் அழகோடு!