எங்கள் ஊர் தொடக்கமே ஒரு குளத்தோடுதான் அந்தக்குளம் எங்கள் ஊருக்கு ச்சொந்தமில்லை பின் ஊரின் முடிவும் ஒரு குளத்தோடுதான் அந்த குளமும் எங்க ஊருக்குச்சொந்தமில்லை. ஊரின் நடுவில் உள்ள ஒரு குளமே எங்கள் ஊருக்குச்சொந்தம். சிறிய குளம்தான். ஊரின் மற்றைய எல்லைகளாக ஒருபக்கம் பெரிய மலை ஒன்றும் மறுபக்கம் இன்னுமொரு சிறிய மலையும் காடுகளும் சேனைப்பயிர்செய்கை செய்வதற்கான விவசாய நிலங்களாகும். குளத்துக்குப்பின்னால் வயல் நிலங்கள் உள்ளது இவை இந்தக்குளத்தின் நீரையும் மழையையும் நம்பியே வேளான்மை விவசாயம் செய்யப்படுகிறது. பருவபெயர்ச்சி மழை சரியாக பெய்தால் அந்தக்காலத்திலும் அந்த மழை நீர் கோடைகாலம் வரை குளத்தில் தேங்கியிருந்தால் கோடைகாலத்திலும் என வருடத்திற்கு இரண்டு போகங்கள் வேளான்மை செய்யப்படுகிறது.
இந்தக்குளத்தில் குளித்து,நீராடி,விளையாடி மகிழ்ந்த சிறுவர் காலம் மீண்டும் வராதா என மனம் ஏங்கித்தவிக்கிறது.. குளத்தில் குளிப்பதென்பதே உடலுக்கும் மனதுக்கும் ஓர் இனம்புரியாத புத்துணர்வை தரும் விடயம். பகல் முவயலில் வேலை செய்துவிட்டு குளத்தில் இறங்கி குளித்தாலே உடலிலுள்ள அசுத்தங்கள் மட்டுமில்லாமல் களைப்பும் நீங்கிவிடும். பின்பு சுகமான உறக்கத்திற்கும் இது வழி வகுக்கும்.
சின்ன வயதில் பாடசாலை விட்டு வந்ததும் குரான் மத்ரஸா வகுப்புக்குச்செல்ல வேண்டும். அந்த வகுப்பை பல முறை வீட்டுக்கு தெரியாமல் கட்டடித்துவிட்டு குளத்துக்கு குளிக்கச்சென்று ஆட்டம்போட்டதெல்லாம் இனிமையான நினைவுகள். மைதாணத்தில் விளையாடியதைவிட குளத்தில் விளையாடியதுதான் அதிகம். குளத்தின் நடுவில் ஒரு வட்ட வடிவிலான கல் இருக்கிறது.. அக்கல் வரை நீந்திச்சென்று கல்லின் மேல் ஏறி குதிப்பதுதான் அதில் விஷேடம்.. “எரும மாடுகள் குளத்துல பாய்ந்த மாதிரி குளத்த கலக்குறானுகள்” என ஊர் பெரிசுகளின் திட்டு வாங்காமல் திரும்பியதே இல்லை.. இந்த ஆட்டமெல்லாம் கோடை காலத்தில் மாத்திரம்தான் காரணம் அன்நேரம்தான் குளத்தின் நீர் மட்டம் குறைந்து யாரும் மூழ்கிடும் அபாயம் ஏற்படாது. மாரிகாலத்தில் குளம் நிரம்பிவிட்டால் ஓரமாநின்னு குளிச்சிட்டு வீடு திரும்பிட வேண்டியதுதான்.
இப்பவெல்லாம் காலம் மாறிப்போச்சு! ஊருக்கு குழாய்நீர்த்திட்டம் வந்துட்டதால யாரும் குளத்துக்கு போய் குளிப்பதா தெரியல்ல, குளமே காடாப்போய்க்கிடக்கு.எல்லாரும் குளியறையிலதான் குளிக்கிறாங்களாம்.. இதுல கொஞ்சபேர் வயல்ல வேலை செய்திட்டு குளத்தை தாண்டி வந்து வீட்டு குளியறையில் குளிப்பதுதான் வேடிக்கை. ஊருக்குப்போனதும் முதல் வேலையா குளத்தில் பாய்ந்து குளிக்க வேண்டும் போலிருக்கு!
இன்னும் கொஞ்சம் எங்க ஊரைப்பற்றி http://puliyankulam.blogspot.com/