வனயுத்தம்-உண்மைத்தமிழன்-விஷ்வரூபம்-இஸ்லாமியர்கள்!

உலகில் இதுவரை உருவான எந்தவொரு போராட்ட,கிளர்ச்சி,தீவிரவாத குழுவாயினும் அவர்களின் உருவாக்கத்துக்கு பின்னால் ஒரு கதை,பின்புலம்,வலுவான காரணம், கொஞ்சமாவது நியாயம் நிச்சயம் இருக்கவே செய்யும். அவர்கள் தீவிரவாதிகள், போராளிகள் என்ற எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் சரியே! இவர்களைப்பற்றி கதைக்கும் போதோ, இவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தல் காட்சிப்படுத்தல் போன்ற வேலைகளை செய்யும் போது அவர்களின் பக்கமிருக்கும் கொஞ்ச நியாயத்தையும் முன்வைப்பதே நாகரீக அலகு! அவர்கள் எவ்வளவுதான் அயோக்கியர்களாக இருந்தாலும்!
இதுபோலவே விஷ்வரூபம் திரைப்படத்தில் அல்கெய்தா-தலிபான்-ஆப்கான்யுத்தம்-பொதுமக்கள்-அமெரிக்கா ஆக்கிரமிப்பு-சவூதி அரசியல் என்ற பெரிய வட்டத்தை மிகச்சிரிதாக சுருக்கிய கமல்! முழுக்க முழுக்க அமெரிக்கா சார்பாகவும், ஆப்கானியர்களை போர்வெறி பிடித்தவர்களாகவும், ஏனோ தலிபான்கள் பொழுது போக்கிற்காக தீவிரவாதம் செய்வதைப்போல் காட்சிபடுத்தியிருந்ததைக்கண்டு பல இஸ்லாமியர்கள் தங்களின் வெறுப்பை வெளிக்காட்டினார்கள்..! இதை சரிவர புரிந்துகொள்ளாத மாற்றுமத சகோதரர்களில் சிலர், நடப்பதைத்தானே காட்டுகிறார்! ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள்! அப்படியென்றால் இவர்கள் அல்கெய்தா தாலிபான்களை ஆதரிக்கிறார்களா என கேள்விகள் தொடுத்தார்கள்.. அல்கெய்தாவின் உலகம் தழுவிய தீவிரவாதம்,தாலிபான்களின் அடக்குமுறை, பெண்கள் மீதான அவர்கள் கட்டுப்பாடுகள் போன்றவை விமர்சிக்கப்படவேண்டியவைதான். அதற்காக கண்னை மூடிக்கொண்டு அவர்கள் மட்டும்தான் கொடூரமானவர்கள் என தீர்ப்பெழுதிட முடியாது. அவர்கள் பக்க நியாயங்களும் விமர்சிக்கப்படவேண்டும்! கொலைக்குற்றவாளிக்கு கூட அவன்பக்க நியாயத்தை சொல்வதற்கு உரிமை இருக்கிறது என நினைக்கிறேன்.
இப்படியான நேரத்திலேயே வீரப்பனின் கதையை தழுவியதாய் வனயுத்தம் என்ற திரைப்படம் வெளியாகிருக்கிறது. இது முழுக்க முழுக்க அரசுக்கு சார்பாகவும் வீரப்பன் கொலைகாரன், கொடுங்கோலன் போலவும். அவர் பக்கமுள்ள நியாயங்களோ அவர் செய்த கொலைகளுக்கான காரணங்களோ விளக்கப்படவில்லையென்றும், மலைவாழ் பெண்கள் மீதான வன்புணர்வு மற்றும் அம்மக்கள் மீது நடாத்தப்பட்ட அராஜக தாக்குதல்களுக்கு காரணமான தமிழ்நாட்டு/கர்நாடகா போலிசாரை உத்தமர்களாக காட்டியிருப்பதாகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் முக்கியமானது உண்மைத்தமிழன் அவர்களின் விமர்சனம்  அதிலிருந்து சில கருத்துக்களை இங்கே பகிர்கிறேன். இதிலிருந்து சிலரின் இரட்டை முகமும் இஸ்லாமியர்களின் விஷ்வரூப எதிர்ப்பின் சில நியாயங்களும் புரியலாம்! புரிந்துகொல்ளும் மனநிலையில் இருப்பவர்களுக்கு. சிவப்பு நிறத்தில் உள்ளவை உண்மைத்தமிழன் எழுத்துக்கள்!

வாழ்க்கைக் கதையைச் சொல்ல வந்தவர்கள், எதனால் வீரப்பன் வேட்டையை விரும்பினான்.. எதனால் அரசு அதிகாரிகளை அவமதித்தான்.. வெறுத்தான் என்பதையெல்லாம் துளிகூட சொல்லாமல், அவர் வசதிக்காக வீரப்பனை கொடுங்கோலன் என்றும், அவனை அழிக்க வந்த போலீஸாரை ஏதோ யோக்கிய புருஷர்களாகவும் காட்டியிருக்கும் இப்படத்தை என்னால் எந்தக் கோணத்திலும் அணுக முடியவில்லை..!


அதேதானே நாங்களும் சொன்னோம் தாலிபான்களையும் அல்கெய்தாவினரையும் அவர்கள் பக்க நியாயங்களை காட்டாமல் அயோக்கியர்களாக காட்டி அமெரிக்காவை யோக்கிய புருஷர்களாக காட்டியிருக்கும் அப்படத்தையும் எங்களால் எந்த கோணத்திலும் அணுக முடியாது!

நான் வீரப்பனுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் நடந்த கதையை சொல்லும்போது 90 சதவிகிதமாவது உண்மையிருக்க வேண்டாமா..? வீரப்பன் வேட்டை என்ற பெயரில் மலைவாழ் மக்களை பிடித்து மாதேஸ்வரன் மலைப்பகுதியில் ஒர்க்ஷாப் என்னும் கொட்டகையில் அடைத்து வைத்து.. ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் யூத மக்களுக்கு நேர்ந்த கொடுமையைப் போலவும், சிங்களப் படைகள் தமிழர்களுக்கு எதிராக செய்ததையும் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக இரு மாநில கூட்டு போலீஸ் படைகள் செய்திருப்பதாக ரெங்கநாத்மிஸ்ரா கமிஷன், சதாசிவம் கமிஷன் இரண்டுமே சொல்லியிருந்தும், இதனை படத்தில் குறிப்பிடவே இல்லை..! காட்டவும் இல்லை..!



நாங்களும் தாலிபான்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை ஆனால் நடந்த ஒன்றை நடக்கின்ற ஒன்றை சொல்லும் போது கொஞ்சமாவது நேர்மை வேண்டாமா? பின்லேடன் என்ற தனிமனிதனையும் அவன் சகாக்களையும் பிடிப்பதற்காக ஒரு தேசத்தையே சவக்காடாகவும் யுத்த பூமியாகவும் மாற்றிய அமெரிக்க ரானுவத்தின் அட்டூழியங்களை கொஞ்சமாவது காட்ட வேண்டாமா

இத்தனை கொடுமைகளையும் செய்துவிட்டு அவர்கள் மீது தடா வழக்கிலும் கைது செய்து சிறையிலும் அடைத்தார்கள் நமது மாண்புமிகு அரசியல், அதிகார வர்க்கம்.. சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தடா கைதிகளாக்கப்பட்டு பின்பு இவர்களில் அதிகம்பேர் எட்டாண்டுகள் கழித்தே விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்..!


அவர்களாவது எட்டாண்டுகள் கழித்து விடுவிக்கப்பட்டனர்..  ஆனால் இன்னும் யுத்தக்கைதிகளாக குவாந்த நாமோ சிறையில் இருட்டறைகளில் அடைபட்டுக்கிடக்கும் ஆப்கான் மக்களின் நிலை என்ன இதற்கு அமெரிக்க அரசிடம் உள்ள பதில்தான் என்ன? 

ஒரு சினிமாவை சினிமாவாக பார்க்க இதுவொன்றும் சாதா சினிமா இல்லை.. ஸ்பெஷல்.. இந்தியாவில் யாருமே செய்ய முடியாத ஒரு ஆவணப் படத்தை தான் உருவாக்கியிருப்பதாக இயக்குநர் ரமேஷ் மீடியாக்களில் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் சினிமாவையும் தாண்டி விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது..! 


சபாஷ்!  சினிமாவ சினிமாவத்தான் பார்க்கனும்னு பலர் பேர் சொன்னாக.. இதையும் சினிமாவா பார்த்துட்டு போகவேண்டியதுதானே! ஏன் முடியாது? காரணம் இது சாதா சினிமா அல்ல! இதே கருமத்தத்தான் நாங்களும் சொன்னோம் அப்போவெல்லாம் எங்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்தியதேனோ.. அதுவும் சாதாரன சினிமா அல்ல ஒரு தேசத்து மக்களின் போராட்டம் சம்பந்தமானது. அங்கு நடந்ததைதானே சொல்கிறோம் எனும் கதை வேறு அதனால்தான் சினிமாவையும் தாண்டி விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது!

அப்பாவி மலைவாழ் மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிய இரு மாநில கூட்டு அதிரடிப் படையினருடன் கூடவே இப்போது இந்த இயக்குநர் ரமேஷும் ஒரு குற்றவாளியாகிவிட்டார்



இதை இப்படியும் சொல்லலாம்!!
ஆப்கான் மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிய அமெரிக்க நேட்டோ கூட்டு அதிரடிப்படையினருடன் கூடவே இப்போது இயக்குனர் கமலஹாசனும் ஒரு குற்றவாளியாகிவிட்டார்!

Scroll to Top