தேங்காய் சம்பல் செய்வதற்கு தேங்காய் துருவல்,வெங்காயம்,பச்சமிளகாய் or காய்ந்த மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவையே அடிப்படைத்தேவைகள். தக்காளி,எலுமிச்சம் சாறு(lime) யும் தேவையாயின் சேர்த்துக்கொள்ளல்லாம்.. எலுமிச்சம் சாறு சேர்த்தால் புளிப்பு சுவையுடன் சுவை இரட்டிப்பாகும். எந்தவித அடுப்பின் தேவையில்லாமல் கைகளாலே செய்து விட முடியும்! எங்கள் வீடு உட்பட இவற்றை செய்ய அம்மிக்கல்லையும் பயன்படுத்துவார்கள். இலங்கையின் அதிகவீடுகளில் காலை உணவாக சோறும் உட்கொள்ளப்படுகிறது, அவ்வாறான நேரங்களில் மீன்,இறைச்சி,முட்டை, காய்கறி என எப்போதும் வாங்கி உண்ண வசதியில்லாத வீடுகளில் சோற்றுக்கு பரிமாறப்படும் கறியாக முதன்மை பெறுவது பருப்பும் அதனுடன் சேர்த்து இந்த தேங்காய் சம்பலும்தான்! ஏழை வீடுகளுக்கேயுரிய உணவு வகை என்றாலும் அதன் சுவையில் குறையில்லை. தேங்காய் சம்பல் என்பது பொதுவாக ஏழை,பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பபடும் ஓர் உணவு!
அடுத்ததாக இந்த ரொட்டி என்பது தெற்காசிய நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் உண்ணப்படும் ஓர் உணவு வகையாகும். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளில் மூன்றுவேளை உணவும் ரொட்டிதான்! இந்தியாவின் வட மாநிலங்கள் சிலவற்றிலும் மூன்று வேளை உணவாக ரொட்டி/சப்பாத்தியே உணணப்படுகிறது அபூர்வமாய்த்தான் சோறு உண்பார்கள்! ஆனால் நமக்கு சோற்றை ஒரு கட்டு கட்டினாத்தான் சாப்பிட்ட திருப்தியே கிடைக்கும்.ஆனால் ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு விதமாக இந்த ரொட்டியை தயார் செய்கின்றனர்.. அதேபோல் இலங்கையில் செய்யப்படும் ரொட்டியும் மாறுபட்டது. இவை அதிகமாக கோதுமை மாவினாலும் அரிசி மாவினாலுமே செய்யப்படுகிறது! இவற்றுக்கும் தேங்காய் துருவல் சேர்ப்பதால் தேங்காய்(பொல் -சிங்களத்தில்) ரொட்டி என்றே அழைக்கப்படுகிறது! இவை வட்டவடிவாக கொஞ்சம் தடிப்பமானதாக இருக்கும் காலை உணவாக ஒரு ரொட்டி சாப்பிட்டாலே போதுமானது. இவை வீடுகளிலேயே செய்யப்படுகிறது கடைகளில் விற்கப்படுவது மிக மிக குறைவு.
இலங்கையின் கோதுமை மா ரொட்டியே காலை இரவு உணவாக அதிக வீடுகளில் கானக்கிடைக்கும் குறிப்பாக எங்கள் (முஸ்லிம்) பிரதேசத்தில். ஒவ்வொரு பிரதேசத்திலும் வெவ்வேறான உணவுகளை அதிகம் உண்பார்கள். சில இடங்களில் காலை இரவு இரு நேரமும் அதிகமாக பான் மட்டும்தான்! தமிழ்நாட்டு நண்பர்களுக்கு இந்த “பான்” உண்ணும் விடயத்தை சொன்னால் வியப்பாக பார்ப்பார்கள்! அங்கே அப்பிடியொரு உணவுப்பழக்கம் இல்லையாம்! அவர்களுக்கு தோசையும் இட்லியும் எப்படியோ அப்படியே இலங்கையர்களுக்கு “பான்”! கோதுமை மாவும் பானும் இல்லையென்றால் இலங்கையே ஸ்தம்பித்து போய்விடும்! சிங்களவர்கள் ரொட்டி/பான் அதிகம் சாப்பிட மாட்டார்கள். அவர்களில் அதிகமானோர் மூன்றுவேளையும் சோறு சாப்பிடுபவர்களே!
எந்த ஸ்டார் உணவகங்களின் உணவுக்கும் ஈடாகாது இந்த ரொட்டியும் தேங்காய் சம்பலும் சேர்ந்துகொண்டால் கிடைக்கும் தனிச்சுவை! அதை உண்டவர்களுக்கே அது புரியும்!