கொஞ்ச காலத்திற்கு பின் அந்த செய்திகள் மறக்கடிக்கப்பட்டது.. மிக நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்த “ஹோட்டல் ருவண்டா” திரைப்படத்தை அண்மையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.. அதன் பிறகே ருவண்டா யுத்தத்தின் கொடூரங்கள் மீண்டும் நினைவுக்கு வந்தது..யுத்தம் உக்கிரமடைந்த காலப்பகுதியில் தன் குடும்பத்தையும், அயலவர்களையும், குழந்தைகளையும்,வெளிநாட்டுக்காரர்களையும், எந்த இன மக்கள் தேடி தேடி கொல்லப்பட்டார்களோ அந்த இன மக்களில் கொஞ்சம் பேரையும்..மொத்தமாக 1200 பேர் அளவில், ஹோட்டல் மேனேஜராக பல சிக்கல்களுக்கு மத்தியில் தன் ஹோட்டலில் வைத்து காப்பாற்றிய ஒருவரின் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டதே இந்த திரைப்படம்..
அந்த காட்சிகளை திரைப்படத்துக்கென்று படமாக்கினார்களா.. அல்லது யுத்தம் நடந்த காலப்பகுதியில் ஒழிந்து நின்று படமாக்கினார்களா என்ற சந்தேகம் படம் பார்க்கும் போது உங்களுக்கும் வரலாம். அவ்வளவு மக்களை ஒன்றினைத்து ஒரு நிஜமான யுத்தகளம் போன்ற பிண்னனியை உருவாக்கி இப்படியொரு படத்தை எப்படி இயக்க முடிந்தது என வியந்து கொண்டிருக்கிறேன் அந்த வகையில் இயக்குனர் Terry George மற்றும் திரைக்கதையாசிரியர்கள் George and Keir Pearson பாராட்டுக்குரியவர்கள்..
ஐ.நா பாதுகாப்பு படைகள் வந்து தங்களை காப்பாற்றி அழைத்துச்செல்வார்கள் என எதிர்பார்த்திருக்கையில் ஐ.நா படைகள் வந்து வெளிநாட்டவர்களான வெள்ளைக்காரர்களை மற்றும் அழைத்துச்செல்கையில்.. செஞ்சிலுவைச்சங்க ஊழியர், மேனேஜரைப்பார்த்து நீங்களெல்லாம் ஆபிரிக்கர்கள் கறுப்பர்கள் அதனால்தான் உங்களை அவர்கள் காப்பாற்றவில்லை என சொல்லுமிடம்.. ஐ.நா வின் பாரபட்சகொள்கைகளின் யதார்த்தம்.. அதன் பின் காயப்பட்டு உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடி வருபவர்களை தன் ஹோட்டலுக்குள் அனுப்பி வைக்கும் காட்சி மனிதாபிமானத்தின் உச்சம்..இத்தனைக்கும் அந்த மேனேஜர் ஹுட்டு இனத்தை சேர்ந்தவர்.. அதாவது ருட்சி இனத்துகெதிராக இனவெறியாட்டத்தை நடத்திய இனத்தைசேர்ந்தவர்..
1990 ம் ஆண்டு முதல் சிறு சிறு சம்பவங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டுப்பிரச்சினை 1994 ம் ஆண்டே உக்கிரமடைந்தது.. 94 ம் ஆண்டு ஏப்ரல் 6 யில் ருவண்டா ஜனாதிபதி Juvénal Habyarimana கொல்லப்படுகிறார்.. இவர் பெரும்பாண்மை ஹுட்டு இனத்தைச்சேர்ந்தவர் என்பதால் பெரும்பாண்மை ஹுட்டு இனத்தவர்களால் சிறுபாண்மை ருட்சி இனத்தவர்களுக்கெதிராக தொடக்கப்பட்டதே இந்த இனவெறியுடன் சேர்ந்த கொலவெறி..அதாவது 100 நாட்களுக்குள் மாத்திரம் 800,000 மக்கள் கொன்றொழிக்கப்படார்களாம். இது இன்நாட்டு மொத்த சனத்தொகையில் பத்தில் ஒரு பங்காகும்..
ருவண்டா ஜனாதிபதி Juvénal Habyarimana
இரண்டாம் உலகப்போர் நடந்த காலப்பகுதியில் யூதர்களுக்கு எதிரான இனவழிப்பை நடத்திய நாஸிகளிடமிருந்து Oskar Schindler என்ற ஜேர்மன் தொழிலதிபர்.. ஆயிரக்கணக்கான யூதர்களை காப்பாற்றியதை பதிவு செய்த Schindler’s List திரைப்படம் மூலம் யூதர்கள் மத்தியில் Oskar Schindler பெருமைக்குறியவராக மாற்றப்பட்டாரோ அந்த வகையில் இந்த ஹோட்டல் ருவண்டா திரைப்படம் மூலம் தன் உயிரை பெரிதாக மதிக்காமல் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் உயிரைக்காப்பாற்றிய அதன் நிஜ ஹீரோ Paul Rusesabagina உலகெங்கிலுமுள்ள மனிதாபிமானத்தை நேசிப்பவர்களினால் உயர்வாக பார்க்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை..
இந்த திரைப்படம் பார்க்கும்போது அந்த மேனேஜராக நடித்த ஹீரோ மீது ஒரு ஈர்ப்பும் அவரின் நடவடிக்கைகளை பாராட்டும் மனநிலையும் உருவாகமல் இருக்க வாய்ப்பில்லை.. இது ஒரு உண்மைச்சம்பவம் ஆனபடியால் அதன் நிஜ ஹீரோ யார் என தேடிப்பார்க்கும் ஆர்வமும் உங்களுக்கு உண்டாகலாம்.. அந்த ஆர்வம் எனக்கு ஏற்பட்டது அதன் விளைவே இந்தப்பதிவு. உண்மையில் அவர் ஒரு ஹீரோதான் யுத்தம் உக்கிரமடைந்த காலப்பகுதியில் ஹோட்டலை மூடச்சொல்லி கிளர்ச்சியாளர்களும் அரசாங்கப்படைகளும் மிரட்டிய போதிலும் அவர்களுக்கு காசு கொடுத்து சமாளித்து ஆயிரத்துக்கதிகமான மக்களை தன் ஹோட்டலுக்குள் மறைந்து வைத்து பலநாட்களுக்கு உணவு கொடுத்து காப்பாற்றியவர் இவர்..ஒரு முறையாவது இவரை நேரில் சந்தித்து இவரை பாராட்ட வேண்டும் என மனது விரும்புகிறது.. இப்போது பெல்ஜியத்தில் வசித்து வருகிறாராம்.. தன் மனைவி பிள்ளைகளுடன்.