பொதுவாக மிருகங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். காட்டில் வாழ்பவை, ஊருக்குள் வாழ்பவை என்று. இதைவிடுத்து நீர்வாழ் உயிரினங்கள், ஊரிலும் வாழும் காட்டிலும் வாழும் எல்லா இடங்களிலும் வாழும் ஓரு வகையும் உண்டு. உதாரணமாக பாம்பு,பூச்சி,எறும்பு இனங்கள்.
அதிலே ஊரில் வாழும் மிருகங்களில். இந்த நாய்கள் என்பது முக்கியமானது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இவைதான் காலம் காலமாக நாம் வாழும் சூழலில் சேர்ந்து வாழ்ந்து வருபவை. இதிலே வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை விட்டுவிடுவோம். நான் சொல்லப்போவது தெருக்களையே தன் வசிப்பிடமாக்கி எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி அலைந்து, திரிந்து, கண்டதெல்லாம் உண்டு, விரும்பியதுடன் உறவு கொண்டு, குட்டிகளை ஈன்று, சொறிபிடித்து கடைசியில் எங்காவது இறந்து போகும் தெருநாய்களைப்பற்றி.
தெருநாய்களின் பழக்க வழக்கம் வாழ்க்கை முறையானது ஏனைய வீட்டிலே வளர்க்கப்படும் நாய்களின் பழக்க வழக்கங்களிலும் மாறுபட்டது. இவைகளுக்கு இதைத்தான் உண்ணவேண்டும், இங்கேதான் இருக்க வேண்டும் என்கிற எந்த கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமாக அலைந்து திரியும்..
எனக்குத்தெரிந்த வரை இந்த தெருநாய்களின் ஆயுட்காலம் மிகக்குறுகியது.. நம் தெருக்களில் சுமார் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன் பார்த்த நாய்களை இப்போது கான்பது அரிதாக இருக்கலாம்..காரணம் அவை இறந்து போயிருக்கலாம்! அதிகமான நாய்கள் நோய்களாலேயே இறந்து போகிறது அவைகளின் இடங்களில் இப்போது புதிய நாய்கள் இருக்கலாம்..
மனிதர்களை கேவலமாக திட்டும் போது நாயுடன் ஒப்பிட்டு திட்டுவதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாய் அப்படி என்னதான் கேவலமான காரியத்தை செய்துவிட்டது! நாய் கடிக்கும் என்பதற்காகவா..? பொதுவாக நாய்,பாம்பு போன்றவை மனிதர்கள் சீண்டாதவரை அவர்களை ஒன்றும் செய்யாது.. மனிதர்களை கடிப்பதற்காகவே வெறியூட்டி வளர்க்கப்படும் நாய்களைத்தவிர! ஒருவித நோயினால் பாதிக்கப்பட்ட நாய்கள் அதாவது பைத்தியம் பிடித்ததாக கருதப்படுபவை, இலங்கையில் அவற்றை பிச்சி/விசர் பிடித்த நாய் என சொல்வார்கள்.. இவையும் மனிதர்களை தாக்கலாம்.. இவைகளிடமிருந்து முக்கியமாக குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
மற்றபடி நாய்களின் நன்றி மறவாத்தன்மை பற்றி குறிப்பிட்டுச்சொல்கிறார்கள்.. “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதை அன்றே மறப்பது நன்று” என்ற திருக்குறள் நாய்களுக்கும் தெரிந்திருக்கிறது போல.. ஆனால் இந்த நன்றி மறவாத்தன்மை எல்லாத்தெரு நாய்களிடமும் இல்லை. குறிப்பாக வீட்டிலே வளர்க்கப்படும் நாய்களிடமே இந்த தண்மை கானப்படும்.. (இங்கே நான் குறிப்பிடுவது வீட்டிற்குள் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் பற்றியல்ல மாறாக தெருநாய்கள் குட்டி ஈன்றால் அந்தக்குட்டிகளை சிறிசிலிருந்தே எடுத்து வளர்ப்பார்கள் அவை பற்றியே இவை பெரும்பாலும் வீட்டிற்குள் வர அனுமதிக்கப்படுவதில்லை) நம்மைக்கண்டதும் வாளாட்டிக்கொண்டு நம்மைச்சுற்றியே வரும்.. நம் குரலை எவ்வளவு தொலைவிலிருந்து கேட்டாலும் நாம் கூப்பிடுகிறோம் என உணர்ந்தால் நம்மருகே ஓடி வந்துவிடும்.. சில தெருநாய்கள் வீட்டிக்குள் நுழைந்து திருடி தின்றுவிடும்.. ஆனால் இவ்வகையான வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் யாருமில்லாவிட்டாலும் அப்பிடியெல்லாம் வீட்டிற்குள் நுழையாது..
நாய்களிடம் கானப்படும் குணங்களில் பிரதானமாக, அவைகளுக்குள் நிலவும் பிரதேசவாதத்தை குறிப்பிடலாம். அதாவது ஒரு பிரதேச நாய் இன்னொரு பிரதேச நாயை தன் எல்லைக்குள் வந்து வாழ அவ்வளவு சீக்கிரம் அனுமதிக்காது “இது எங்க ஏரியா உள்ள வராதேன்னு” சண்டைக்கு வந்துவிடும். தங்கெழுக்கென்று அவைகளாகவே ஒரு எல்லையை நிர்ணயித்துக்கொண்டு அந்த எல்லைக்குள்ளயே பெரும்பாலும் வசித்து வரும்.
சின்ன வயது பாடசாலை நாட்களில்.. எங்கள் ஆசிரியர் ஒருவர் ஒரு குட்டிக்கதை சொல்லுவார்.. என்னவென்றால், ஒரு கிராமத்தில் கடுமையான வறட்சி பஞ்சம் நிலவவே அக்கிராமவாசிகள் அதில் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உண்பதற்கே உணவில்லாமல் கஷ்டப்பட்டார்கள். இதனால அங்கு வாழ்ந்த நாய்களும் அதிகமாகவே பாதிக்கப்பட்டன! பல நாட்களாகவே பட்டினியாகவே அலைந்து திரிந்தன..
அப்போதே ஒரு சில நாய்களுக்கு சில ஐடியாக்கள் தோன்றின.. அதாவது அந்தவிடத்திலிருந்து குடிபெயர்ந்து வேறு இடத்திற்கு சென்றால பசியில்லாமல் வாழலாம என.. பட்டினியால் வாடியவைகளுக்கு இந்த ஐடியா நல்லதாகவேபட்டது.. எங்கே போகலாம என முடிவு செய்து.. ஒரு சில அனுபவ நாய்களின் ஆலோசனைப்படி கொழும்புக்கு சென்றால நன்றாக உண்டு வாழலாம், அங்கேதான் நிறைய ஹோட்டல்கள் இருக்கின்றன. நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள்.. நிறைய உணவு அங்கே கொட்டப்படலாம அதனால கொழும்புக்கு செல்ல முடிவாகி.. ஒரு சில வயதான நாய்களைத்தவிர மற்றையவை, ஊரைவிட்டுக்கிளம்பி கொழும்பு நோக்கி நகர்ந்தன..
ஊரைவிட்டுச்சென்று சில நாட்களிலேயே கொழும்புக்குச்சென்ற நாய்கள் மீண்டும் ஊருக்குத்திரும்பியது. வந்த நாய்களிடம் என்னாச்சு ஏன் இவ்வளவு அவசரமா திரும்பிட்டிங்க என ஊரிலுள்ளவைகள விசாரிக்கத்தொடங்கின.. அப்போதுதான் வந்ததுகள் சொல்லத்தொடங்கியது.. நமக்கு எதிரி மனிதர்களோ வேறு யாருமோ அல்ல! நமக்கு எதிரி நம்மவர்கள்தான் நம் இனம்தான் என்றது ஒரு நாய்.. போகும் வழியெங்கும் ஒவ்வொரு ஊரிலுமிள்ள நம்மைப்போன்ற நாய்க்கூட்டங்களை சமாளித்து செல்வது மிகப்பாடாய் போனது.. கொழும்பு சென்று சேர்ந்ததும், அங்கே நாம் நினைத்ததைப்போல் நிறைய உணவுகள் இருந்தது.. ஆனாலும் அப்பிரதேச நாய்கள் அவற்றைத்தொடுவதற்கு கூட எங்களை அனுமதிக்கவில்லை அவைகளின் தேவைக்கு மேலதிகமாக இருந்தபோதிலும் கூட.. திருட்டுத்தனமாகவே தேடித்திங்க வேண்டி ஏற்பட்டது.. அதனால் நமது சொந்த ஊரில் பட்டினிகிடந்து செத்தாலும் இப்பிடியான பிழைப்பு தேவைப்படாது என நம்ம ஊருக்கே திரும்பிவிட்டோம் என சொல்லிமுடித்ததாம்..
இந்த தெருநாய்களை பற்றி எழுத சுமார் ஒரு வருடமாக முயற்சித்து முடியவில்லை.. நிறைய தடவை எழுதி அழித்துவிட்டிருக்கேன்,காரணம்! இவைகளைப்பற்றியெல்லாம் எதுக்கு பதிவெழுதுவான என்ற எண்ணம்தான்.. பொதுவாக கிராமபுறங்களில் இந்த தெருநாய்களும் நம் சூழலோடு,நம் வாழ்வியலோடு தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன.. ஆனால் நாம்தான் அவற்றை கவனிப்பதேயில்லை! என்னையும் நான்கு வயதில் நாய் கடித்ததாம்.. முற்றத்திலே மலம் கழித்துக்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த நாயொன்று எனது பின்புறத்தை லேசாக கடித்ததாகவோ/பிராண்டியதாகவோ வீட்டிலே சொல்லி கிண்டல் பண்ணுவார்கள்.. செவனேன்னு முற்றத்தில் மலம் கழித்த என்னை எதுக்கு அந்த நாய் தாக்கியிருக்கனும்.. இன்றைக்கும் யோசிக்கிறேன்.. ஒருவேளை மலம் திண்ண வந்த நாய்க்கு இடைஞ்சல் கொடுத்து விரட்டியிருப்பேனோ..? அந்த கோபத்தில் தாக்கியிருக்கலாம்..!!