கண் போன போக்கிலே கால் போகலாமா…!

கண் போன போக்கிலே கால் போகலாமா

நல்லதொரு பதிவு போட்டு ரொம்ப நாளாகிவிட்டது அதிக வேலை மட்டும் காரணமல்ல என் மனதும்தான்.. எழுதுவதற்குரிய நல்ல சூழலோ நல்ல தெளிவான மனதோ அமைவதென்பது கடினமாகவேயுள்ளது.. ‘எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்’ அந்த பாடல் வரிகள் போல மனதும் ஓடிக்கொண்டேயிருக்கிறது ஓரிடம் நில்லாமல்.

சரி அப்படி அலையும் மனதை  ஓரிடம் நிறுத்தி எதையாவது எழுதுவோம் என்றால் என்னத்த சொல்வது எப்படி சொல்வது கட்டுரையா சொல்வதா கவிதையா சொல்வதா.. கட்டுரை அதில் ஏதாவது விஷயம் இருக்க வேண்டும். கவிதை என்றால் அதில் கொஞ்சமாவது கவிதைத்தனம் இருக்கவேண்டும் இலக்கியத்தரம் இல்லாவிட்டாலும்.. இப்படி யோசித்துக்கொண்டே பகலும் போகிறது இரவும் போகிறது என்னையறியாமலேயே..இதற்கிடையே  எங்கோ ஓர் பாடல் ஓசை…

கண்போன போக்கிலே கால போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா..
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..

அடடா நாலு வரிக்குள் எத்தனை எத்தனை அர்த்தங்கள் பல இலக்கியங்களில் பக்கம் பக்கமாக சொன்ன விடயங்களை.. பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் சொல்வதற்கு அந்த கவியரசனால் மட்டுமே முடியும்.. என்று மனதில் தோன்றி மறைவதற்குள் அடுத்த வரிகள்

நீ.. பார்த்த பார்வைகள் கனவோடு போகும்..
நீ.. சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்..
ஊர்பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்…
உணராமல் போவோருக்கு உதவாமல் போகும்..

அடடா உண்மையாக வாழவேண்டும் என்பதை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்.. அதையும் உணரமுடியவில்லையாயின் உதவாமல்தான் போகும்.. அடுத்த வரிகள் ஆரம்பம்..

புரியாத சில பேருக்கு புது நாகரீகம்..
புரியாத பல பேருக்கு இது நாகரீகம்..
முறையாக வாழ்வோருக்கு எது நாகரீகம்..
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்..

அடடா எது நாகரீகம் என்பதை நாலு வரியில் உணர்த்த இதைவிட்டால் வேறு வழியில்லை…  அதற்குள் அடுத்த வரிகள்

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்..
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..
இவர் போல யாரெண்டு ஊர் சொல்ல வேண்டும்..

அட்டா என்னத்த சொல்ல என்னத்த சொல்ல.. பாடல் முடிந்தது ஆமா நான் பதிவே போடல்லயே.. வேறொரு நாளைக்கு பார்ப்போம்..

Scroll to Top
Tamil Song Lyrics with English Translation